டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், அரசு செவிலிய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டன்களை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.02.2026) சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், அரசு செவிலிய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி விழா பேரூரையாற்றினார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

செவிலிய பட்டமளிப்பு விழா;
மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவர்களுக்கு இளங்கலை பட்டம் முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது போலவே செவிலியர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அந்தவகையில் கடந்த ஆண்டு தொடங்கி செவிலியர்களுக்குமான பட்டமளிப்பு விழா என்பது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது ஆண்டாக இன்று பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. இன்று டிப்ளமோ நர்சிங் 949 பேருக்கும், பிஎஸ்சி நர்சிங் 75 பேருக்கும், எம்.எஸ்சி நர்சிங் 64 பேருக்கும், Nursing Midwife auxiliary 16 பேரும் என ஆக மொத்தம் 1,100 பேர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். செவிலியர்கள் பட்டம் பெறும் இந்த நிகழ்ச்சி என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

மகப்பேறு பிறப்பு இறப்பு விகிதம் ஒப்பீடு;
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 6 அரசு செவிலியர் கல்லூரிகளும், 25 செவிலியர் பயிற்சி பள்ளிகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. அந்தவகையில் அரசு செவிலியர் கல்லூரிகளைப் பொறுத்தவரை பி.எஸ்சி நர்சிங் 450 மாணவர்களும், Post Basic Nursing 80 மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் 101 பேர் என பயின்று வருகிறார்கள். 25 செவிலியர் பயிற்சி பள்ளிகளில் 2,060 பேர் பயின்று வருகிறார்கள். இவர்கள் பெரும்பகுதியானவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்கள் மூலம் பயன்பெறுவபர்களாக இருந்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு மகப்பேறு பிறப்பு இறப்பு விகிதம் என்பது இந்த அரசு பொறுப்பேற்தற்கு முன்பு ஒரு இலட்சத்திற்கு 90 ஆக இருந்தது. அது தற்போது 39.5 ஆக குறைந்திருக்கிறது. மகப்பேறு இறப்பு விகிதம் பாதிக்கும் குறைந்து இருப்பது பெரிய அளவிலான சாதனையாக உள்ளது. இதில் செவிலியர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது ஆகும். அதேபோல் குழந்தை மரண விகிதம் பொறுத்தவரை 1000 குழந்தை பிறப்புகளுக்கு 10.4 ஆக இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இருந்தது, தற்போது 7.7 ஆக உள்ளது.

719 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை;
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 8,834 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 3,009 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவிட் காலத்தில் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 பேரில் 2,146 செவிலியர்களுக்கு ஏற்கெனவே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதில் 390 பேர் பணிக்கு வரவில்லை. இந்தநிலையில் தான் மீதமிருந்த 719 பேருக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. பணியாற்றிய நாட்கள் மற்றும் விவரங்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்ற 13.02.2026 அன்று கோவிட் காலங்களில் பணிபுரிந்த 719 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாட்டில் செவிலியர்களின் தேவை அதிகரித்து வரும் காரணத்தினாலும், செவிலியர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பயிற்சி முடித்வர்களுக்கு உலகெங்கும் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தோடு 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படவிருக்கிறது. திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இருக்கின்ற மருத்துவக்கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படவிருக்கிறது. இந்த 6 செவிலியர் கல்லூரிகளும் உலகத் தரத்திற்கு இணையாக கட்டமைப்பு மட்டுமல்ல கல்வித் தரத்திற்கும் இணையான வகையில் உருவாக்கப்படவிருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்படவிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மரு.நாராயணசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநர் மரு.சங்கர் சண்முகம் மற்றும் உயரலுவலர்கள், செவிலிய மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: