ஐசிசி மிரட்டல், இலங்கை வேண்டுகோள் இந்தியாவுக்கு எதிராக ஆடும் பாகிஸ்தான்?: ‘கை குலுக்க’ கோரிக்கை வைத்து இறங்கி வரும் பிசிபி

லாகூர்: டி.20 உலக கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில்வரும் 15ம் தேதி மோத உள்ளன. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வர மறுத்த வங்கதேசத்தை தொடரில் இருந்து நீக்கியதால் அந்த அணிக்கு ஆதரவாக இந்த முடிவை எடுத்துள்ளதாக சப்பை காரணத்தை கூறி உள்ளது.

இதனிடையே இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால் பாகிஸ்தானுக்கு நிதி பகிர்வு நிறுத்தம், பிஎஸ்எல்லில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க தடை, அபராதம் என ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, மொஹ்சின் நக்வியை நேரடியாகத் தொடர்பு கொண்டு, இந்த நேரத்தில் இலங்கைக்கு, பாகிஸ்தான் உதவ வேண்டும்என கேட்டுக்கொண்டுள்ளார். கடிதமும் அனுப்பி உள்ளார்.

ஐசிசி எச்சரிக்கை மற்றும் இலங்கையின் வேண்டுகோளை தொடர்ந்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பிசிபி தலைவருமான மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். “வெளிப்படையாக, பாகிஸ்தான் எப்போதும் அரசு மற்றும் கிரிக்கெட் மட்டத்தில் இலங்கையுடன் மிகவும் நெருக்கமான மற்றும் நட்புரீதியான உறவில் உள்ளது. எனவே, அவர்களின் வாரியத்திலிருந்து வரும் மின்அஞ்சல்களை அப்படியே புறக்கணிக்க முடியாது,”என பிசிபி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமருடன் நாளை மொஹ்சின் நக்வி ஆலோசனை நடத்தி நாளை முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் போட்டியின் போது விளையாட்டின் நெறிமுறைகளுக்கு இணங்கி, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கி, கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐசிசி-யிடம் எடுத்துரைக்கும் என தெரிகிறது.

Related Stories: