சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ மெயின் தேர்வில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது. இதனால் சென்னையில் தேர்வர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இன்று ரத்து செய்யப்பட்ட தேர்வு வேறு தேதியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 15ம் தேதி வெளியிட்டது. குரூப் 2 பணியில் 50 இடங்கள், குரூப் 2ஏ பதவியில் 595 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வு எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 பேர், பெண்கள் 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் அடங்குவர். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்தது. இத்தேர்வை 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் எழுதினர். 1 லட்சத்து 34 ஆயிரத்து 843 பேர் தேர்வு எழுத வரவில்லை. தொடர்ந்து கடந்த டிசம்பர் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2 ஏ பதவிகளில் 9,457 பேரும் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது. இதற்கிடையில் குரூப் 2, குரூப் 2 பதவிக்களுக்கான காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 828 ஆக டிஎன்பிஎஸ்சி உயர்த்தியது.
தொடர்ந்து இவர்களுக்கான முதன்மைத் தேர்வு வருகிற 8ம்தேதி(இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி மாநில கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஸ்ணவா கல்லூரிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையங்களில் மொத்தம் 7 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
டிஎன்பிஎஸ்சி அறிவித்தப்படி இன்று காலை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வு நடைபெற இருந்தது. இத்தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் ஆர்வமுடன் காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு வரத் தொடங்கினர்.
இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜி வைஸ்ணவா கல்லூரியில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. அந்த தேர்வு மையத்தில் மொத்தம் 600க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வந்திருந்தனர். ஆனால் அந்த 600 பேர்களில் வெறும் 200 பேர் மட்டுமே தான் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மீதியுள்ள 400 தேர்வர்களுக்கு அரும்பாக்கம் கல்லூரி தான் தேர்வு மையம் என ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டது. ஆனால் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. ஹால் டிக்கெட் இருந்தும் தேர்வு எழுதுவதற்கான இருக்கை ஒதுக்கப்படவில்லை என்பதை அறிந்த தேர்வு எழுத வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
ஹால்டிக்கெட்டில் தேர்வு மையம் இது தான் என்று அறிவிக்கப்பட்டும் ஏன், தேர்வு மையம் ஒதுக்கப்படவில்லை என்று அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், உங்களது பதிவெண் நந்தனம் மையத்தில் இருக்கும் என்றும் அங்கு சென்று தேர்வு எழுதுமாறும் வலியுறுத்தினர். ஆனால் இனி நந்தனம் சென்றால் நேரம் ஆகும் என்றும், தங்களால் தேர்வை சரியாக எழுத முடியாது என்றும் தெரிவித்து தேர்வர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சற்று சமாதானம் அடைந்தனர்.
அதே போல சென்னை திருவல்லிக்கேணி மாநில கல்லூரியில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வை காலை, மாலை என மொத்தமாக 821 பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால், இன்று காலையில் 9 மணி ஆகியும் ஒற்றை இலக்கில் மட்டுமே தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையத்திற்கு வந்தனர். இதேபோன்று நந்தனம் அரசு கல்லூரி தேர்வு மையத்திற்கு காலை 9 மணியாகியும் வினாத்தாளே வரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைப்போல பல்வேறு தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல தேர்வு நடந்து கொண்டிருந்தது. தேர்வர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்படுதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதையடுத்து தேர்வு நடந்த மையங்களில் தேர்வு நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, குரூப் 2ஏ பிரதான தேர்வு(மெயின் தேர்வு) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. பின்னர் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும். இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் (மின்னஞ்சல்) மூலம் தகவல் அளிக்கப்படும். எதிர்வரும் 22ம் தேதி முற்பகலில் நடைபெறவுள்ள குரூப் 2 பொது அறிவு தேர்வு அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) மீண்டும் வரும் 13ம் தேதி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
