சிவகாசி, பிப். 5: வெம்பக்கோட்டை அருகே டூவீலர் தராத முதியவரின் காதை கடித்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள நதிக்குடியை சேர்ந்தவர் முத்தையா(60). இவர் நேற்று ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுவன் வந்தான். ‘அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும், டூவீலர் கொடுங்கள், சீக்கிரம் வந்துவிடுகிறேன்’ என முத்தையாவிடம் கேட்டுள்ளான்.
அதற்கு முத்தையா, ‘டூவீலரில் பெட்ரோல் குறைவாக உள்ளது. தர முடியாது’ என மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், திடீரென முத்தையாவை சரமாரியாக தாக்கினான். மேலும், அவரது காதை கடித்து கொலைமிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். இதில் படுகாயமடைந்த முத்தையா, அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இது குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.
