ஊட்டி, பிப். 5: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஆர்சி காலனி பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து, ஊட்டி நகராட்சி நிர்வாகம், ரூ.12 கோடியில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது.
பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், 2வது வார்டிற்குட்பட்ட ஆர்சி காலனி பகுதிக்கு செல்லும் சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இச்சாலை சிறிய மழை பெய்தாலும் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இச்சாலையை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
