தலைமறைவானதால் பிடிவாரண்ட்: கோவையில் பதுங்கிய கொலையாளி சிக்கினார்: ரவுடி என மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தபோது சிக்கினார்

கோவை, பிப். 5: கோவையில் பதுங்கி இருந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர். ரவுடி என மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயற்சி செய்தபோது சிக்கினார். கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் (52). சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உக்கடம் பிபி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய நபர் ஒருவர், அவரிடம் ரூ.1000 கேட்டுள்ளார்.

அதற்கு மகேந்திரன் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், நான் யார் என்று தெரியுமா?, நான் மிகப்பெரிய ரவுடி, எனக்கு பணம் தர முடியாதா? என கேட்டு மகேந்திரனின் சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை பறிக்க முயற்சித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மகேந்திரன் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த நபர் தப்பிச்சென்றார்.

இது குறித்து மகேந்திரன் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மகேந்திரனிடம் பணம் கேட்டு மிரட்டியது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, குளத்தூரை சேர்ந்த சுரேஷ் என்கிற பாலசுப்பிரமணியம் (42) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் மீது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு இருப்பதும், இதில் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் தலைமறைவானவர் என்பதும், கோவையில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் பகுதியில் சுற்றித்திருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

 

 

Related Stories: