குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மகளை கொன்று மின் ஊழியர் மனைவியுடன் தற்கொலை: உறவினர்களுக்கு உருக்கமான வீடியோ; கோவை அருகே சோகம்

கோவை: கோவை அருகே உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மகளை கொன்று மின் ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரஸ்காலனி, தம்பு நகரை சேர்ந்தவர் கமலேஷ் (44). மின்வாரிய இளநிலை பொறியாளர். இவரது மனைவி இலக்கியா (30). இவர்களது மகள் யக்சிதா ஏஞ்சல் (10), நாயக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கமலேஷ் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் பதிவு ஒன்றை அனுப்பினார்.

அதில், ‘‘குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்’’ என்று உருக்கமாக கூறியிருந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் கதவு உள் பக்கம் தாழிடப்பட்டிருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்காததால் பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது படுக்கைக்கு கீழ் 3 பேரும் இறந்து கிடந்தனர். விசாரணையில், இலக்கியாவுக்கு மார்பக புற்றுநோய் இருந்தது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், இலக்கியா தினம் தினம் வலியால் துடித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கமலேஷ், மகளை கொன்று தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மனைவிடம் கூறி, அவரும் சம்மதம் தெரிவித்ததால் குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மகளை கொன்றுவிட்டு, இருவரும் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* வாட்ஸ் அப்பில் கடைசி பதிவு
தம்பதியர் மகளுடன் சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயத்திற்கு செல்வது வழக்கம். தற்கொலை செய்வதற்கு முன்பு கமலேஷ், ஆலய போதகருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியில் ‘‘நாங்கள் கர்த்தரிடம் செல்கிறோம். எங்களது உடலை ஆலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* `பணத்தை ஏழை மக்களுக்கு வழங்குங்கள்’
மகளை கொன்று மனைவியுடன் தற்கொலை செய்த கமலேஷ், காரில் சென்ற போது உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், எல்லோருக்கும் வணக்கம்…ங்க. எனக்கு ஒரு மகள் இருக்காங்க. 10 வயது ஆகுது. கடந்த ஒரு வருட காலமாக செஸ்ட் கேன்சரால் என் மனைவி பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்கு ட்ரீட்மெண்ட் செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த சில நாட்களாக மேலும் உடல் நிலை மோசமாகி விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். நாங்கள் இறந்த பிறகு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு எடுத்து செல்லாமல் நேரடியாக சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலய கல்லறை தோட்டத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கான செலவுத்தொகை 50 ஆயிரம் ரூபாயை ஆலய அலுவலகத்தில் ஏற்கனவே செலுத்தி விட்டேன். மேலும், 10 லட்சம் ரூபாய் பிக்சட் டெபாசிட் தொகையை ஆலய சபைக்கு எழுதி வைத்துள்ளேன். நான் டிஎன்ஈபியில் வொர்க் பண்ணும்போது இறப்பதால் அதனால் வரும் தொகையை தமிழக ஏழை மக்களுக்கு வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு எங்கள் வாரிசாக இருந்து எங்கள் உடல்களை நல்லபடியாக அடக்கம் செய்ய வேண்டுகிறேன். நான் சார்ந்த திமுக நண்பர்களும், சிஎஸ்ஐ சபையும் இதற்கு உதவ வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: