விவசாயிகள் வங்கி கணக்கில் பிப்.15 முதல் காப்பீட்டு தொகையை வரவு வைக்க வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு பயிர்காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகைகளை உழவர்களுக்கு உடனடியாக வழங்கிடும் பொருட்டு ஆய்வுக் கூட்டம் இன்று (02.02.2026) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 2025 குறுவை பருவத்தில் நெற்பயிர் அறுவடை பரிசோதனை விவரம், கணக்கீடு செய்யப்பட்ட சராசரி மகசூல் விவரம் தயார் செய்து காப்பீட்டு நிறுவனங்கள் 14.02.2026க்குள் ஒப்புதல் அளித்து, தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 15.02.2026 முதல் வரவு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல, சம்பா நெல் பயிர் அறுவடை பரிசோதனை விவரம் 34 மாவட்டங்களில் 39,428 எண்கள் நடத்தப்பட வேண்டும். இதில் தற்போது 25 சதவீதம் முடிவுற்றது. மீதமுள்ள 75 சதவீதம் முடிவுற்றவுடன் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும் சமீபத்தில் வெள்ள பாதிப்பிற்குள்ளான நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒரு வார காலத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, முதன்மை செயலாளர் /ஆணையர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆர். ஜெயா, ஆணையர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் த. ஆபிரகாம், வேளாண்மை இயக்குநர் பி. முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி. குமரவேல்பாண்டியன், தலைமைப் பொறியாளர் (வே.பொ.) ஆர். முருகேசன், தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: