3500 ஆண்டுகள் பழமையான தமிழ்மொழி மீதுள்ள செருக்கு காரணமாகவே வேறொரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டேன்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதி

சென்னை: மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி நீதிமன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்திய மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இறுதிச்சுற்று போட்டிக்கு பிறகு நடந்த நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன், ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன், ராகேஷ் சட்ட அறக்கட்டளை தலைவரும், நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மாதிரி வழக்காடு மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.பாலாஜி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்புகளான மொழி, மின்சாரம், சக்கரம், குண்டூசி ஆகியவற்றில் முதலிடத்தில் உள்ள மொழி என்பது தனி மனிதன் கண்டுபிடித்தது இல்லை. ஒரு சமூகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் உள்ள 6000 மொழிகள் பேசப்பட்டாலும், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், சீனம் மற்றும் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி ஆகியவையே 2000 ஆண்டுகளை கடந்தவை. எந்த அரசனையோ, இறைவனையோ, மதத்தையோ உயர்த்திப் பிடிக்காத செழுமைமிக்க உலகப் பொதுமுறை நூலான திருக்குறளில் ஒவ்வொரு அறக்கூற்றையும் நுட்பமாக சொல்ல முடிந்தது என்றால், இரண்டாயிரம் மொழிப்போராட்டத்தின் வரலாறு நம் அனைவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மொழியில் முக்கியம் மதிப்பெண் எடுப்பதல்ல. மொழி நம் மூச்சு, நம் உயிர், நம் அடையாளம் என்பதை உணர வேண்டும். என் தமிழ் மொழியின் தொன்மை, என் மொழி மீதான எனக்குள்ள செருக்கு காரணமாக மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: