தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 6 பொறியியல் பட்டதாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 மொபைல் போன்கள், 33 சிம்கார்டுகள், 44 வங்கி கணக்கு விவரங்கள், 68 ஏடிஎம் கார்டுகள், 13 செக் புத்தகங்கள், 2 லேப்டாப்கள் மற்றும் 1 மெமரி கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என்று கூறி ரூ.5,83,007 பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக தென்காசியை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்ததுனர். மேலும், சிவகங்கையை சேர்ந்த சரவணன், ஹரீஷ், தேவா, ஜாகீத் அகமத், சுதாகரன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த ஆவுடையப்பன் என்ற மனோஜ் ஆகிய 6 பேரை இதுதொடர்பாக கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து 10 மொபைல் போன்கள், 33 சிம்கார்டுகள், 44 வங்கி கணக்கு விவரங்கள், 68 ஏடிஎம் கார்டுகள், 13 செக் புத்தகங்கள், 2 லேப்டாப்கள் மற்றும் 1 மெமரி கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும் சிங்கப்பூரில் இதற்கு முன்பு பணியாற்றியிருப்பதாகவும், நாளிதழில் பணியாற்றி வருவதாகவும் குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் தாங்கள் பெற்ற பொறியியல் அறிவை சைபர் குற்றச்செயல்களில் தவறாக பயன்படுத்தலாம் என எண்ணி இந்த குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அவர்கள், Donepay, Showpay, Hoyopay and Havipay போன்ற ஆப்களை பயன்படுத்தியும், தாங்கள் பணியாற்றி வந்த சிம்கார்டு விற்பனை பணியின் மூலம் பழக்கமான நபர்களிடம் வங்கி கணக்குகளை திறந்து தருமாறு கூறியும், சிவகங்கை, பரமக்குடி, காளையார்கோவில் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள பல்வேறு நபர்களை பணம் தருவதாக கூறி ஏமாற்றி வங்கி கணக்குகளை பெற்றுக் கொண்டும், அந்த வங்கி கணக்குகளை சைபர் மோசடி குற்றங்களில் ஏமாற்றி பெறப்படும் பணத்தை பெற பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்கள் மீது இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
