ஓசூர், ஜன.21: சூளகிரி தாலுகா அலுவலகம் முன் கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி வழங்கிட கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரளமான கோழி வளர்ப்பு விவசாயிகள் கலந்துகொண்டு, கோழி வளர்ப்பு விவசாயிகள் ஏற்றுமதியாளர் நலன் கருதி, நலவாரியம் அமைக்க வேண்டும். காப்பீடு திட்டம் மற்றும் வங்கி கடனுதவி வழங்க வேண்டும்.
கறிக்கோழி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும். கோழி நிறுவனங்கள் கோழிக்கான தீவனம், 40 கிராம் எடையுள்ள கோழி குஞ்சுகளை வழங்க வேண்டும். கறிகோழி வளர்பில் ஒரு கிலோவிற்கு ரூ.6.50 வழங்குவதை ரூ.20 ஆக உயர்த்தி விலை நிர்ணயம் செய்யவேண்டும். தமிழக அரசு தலையிட்டு விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு பேச்சுவார்த்ததையில் ஈடுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐகேஎஸ் மாவட்ட தலைவர் முருகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
