கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை, சாக்கடை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 241 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வருகிற 26ம் தேதியன்று நடைபெறும் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஆர்டிஓ ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
