பேராவூரணி, ஜன.14: ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) உள்ளது. கடந்த 12ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதனை பார்ப்பதற்காக பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி உடையார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் 10 பேர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமநாதன் தலைமையில் ஹரிகோட்டாவிற்கு ரயிலில் சென்றனர். அப்போது, மாணவர்கள் ராக்கெட் விண்ணில் ஏவிய நிகழ்வை நேரடியாக பார்த்து மகிழ்ந்தனர்.
பிறகு சென்னை வந்து ரிப்பன் மாளிகை , விக்டோரியா மஹால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து சொந்த ஊருக்கு திரும்பினர். இதுவரை ரயிலில் பயணம் செய்திராத பள்ளி மாணவர்களை ரயிலில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியரை கிராம மக்கள் பாராட்டினர். மாணவர்களுடன் பள்ளி மேலாண்மை குழு தலைவி இளஞ்சியம், மேலாண்மை குழு ஆசிரியை சாருமதி, மேலாண்மை குழு உறுப்பினர் தரண்யா ஆகியோரும் சென்றிருந்தனர்.
