திருவள்ளூர் நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் தொடரும் விபத்துகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களில் செல்லும்போது கடும் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகராட்சியில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரும்புதூர், ஆந்திர மாநிலம் திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் வழியாக நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளிக்கு செல்பவர்களும், அரசு மருத்துவமனைக்கு வருபவர்களும் பேருந்தில் இருந்து இறங்கி சாலைகளில் தான் நடந்து செல்ல வேண்டும்.

திருவள்ளூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சிறு வியாபாரிகள் திருவள்ளூருக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வதுண்டு. சாலையில் நகரின் முக்கிய சாலைகளில் நாய்கள் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதனால், பலத்த காயங்கள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் கார், வேன், லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் செல்லும்போதும் நாய்கள் குறுக்கே ஓடி வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொதுவாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதன்படி அந்தந்த நிர்வாகம் சார்பில் இதற்கான சரியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. இருப்பினும் மாவட்ட தலைநகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், பெண்கள் வந்து செல்லக்கூடிய இந்த சாலைகளில் நாய்கள் சுற்றித்திரிவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அந்த நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு சாலையில் திடீரென ஓடுவதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்திலும் தொல்லை
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் நாய்களால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், 1000க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான அதிகாரிகள், அலுவலர்கள் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த, அலுவலகங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதிலும், குறிப்பாக திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வதுண்டு.

பொதுவாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிக்கடி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்தந்த நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகளை சரியாக மேற்கொள்வதில்லை. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே நாய்கள் சுற்றித்திரிவதால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறைகளை தீர்க்க வரும் பொதுமக்கள் நாய் கடியால் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நிர்வாகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டும், கடித்து குதறிக் கொண்டும் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்காக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் நாய்களை உள்ளே வராமல் தடுத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: