அரியலூர், ஜன. 12: அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அடையாள அட்டையை பெற்று கொள்ள வேண்டும் என அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு 10ம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத அல்லது பெற்றவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் 10ம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும்.
1.1.2026 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதரப்பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பபடிவத்தினை அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்று கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf-???? %E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1 > இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கிகணக்கு புத்தகத்துடனும், மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் மேற்படி சான்றுகளுடன் மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வருகைபுரிந்து விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று மூன்றாண்டு முடிவுற்ற பொது பிரிவினரும் பத்தாண்டுகள் முடிவுற்ற மாற்றுத்திறனாளிகளும் ஏற்கனவே, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்களும், வெவ்வேறு துறையில் பணியாற்றிய மற்றும் பணியாற்றும் நபர்களில் தொழிலாளர் வைப்புநிதி பிடித்தம் செய்யப்பட்டவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியில்லை. தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
