சென்னை: நடிகரும், மநீம கட்சி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன், தனது பெயர், போட்டோ, குரல், ‘உலக நாயகன்’ என்ற பட்டம் ஆகியவற்றை தனது அனுமதியின்றி யாரும் வணிக ரீதியாக பயன்படுத்த தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ‘நீயே விடை’ என்ற நிறுவனம் கமல்ஹாசனின் போட்டோ மற்றும் திரைப்பட வசனங்களை, அவரது அனுமதியின்றி டி-சர்ட்டுகளில் அச்சிட்டு விற்பனை செய்வதை சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற செயல்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அடையாளம் தெரியாத யாராவது தனது அடையாளத்தை தவறாக பயன்படுத்தினாலும், அவர்களுக்கும் இந்த தடை பொருந்தும் வகையில் பொதுவான ஒரு தடையை அவர் கோரியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி இன்று விசாரிக்கிறார். முன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் இதுபோன்ற வழக்கை டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்து, தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
