திருச்செந்தூர்: தமிழ்க்கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் வருடம் முழுவதுமே திருவிழாக்கள் நிறைந்து காணப்படுகிறது. மார்கழி தொடக்கத்தில் இருந்தே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது ஜன. 15ம்தேதி தைப்பொங்கலை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விரதமிருந்து, மாலையணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகர் பக்தி பாடல்களை பாடியும், மனமுருக ஆடியும் வழிபட்டு வருகின்றனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தாகள் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் பாதயாத்திரையாகவும் வந்து வழிபட்டனர். தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, வருகின்ற ஜனவரி 15ம்தேதி வியாழக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
