காதலியுடன் செல்போனில் பேசியதால் ஆத்திரம்; நண்பரை கொன்று உடலை எரித்த வாலிபர் கைது

விருதுநகர்: விருதுநகர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் பொன்ராஜ் விக்னேஷ் (33). இவர், தேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரோகித் என்ற மகன் உள்ளார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பொன்ராஜ் விக்னேஷ் தனது தந்தையுடன் ஓட்டல் நடத்தி வந்தார். விருதுநகர் 116-காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் கிருஷ்ணசாமி(19). இவரும், பொன்ராஜ் விக்னேஷும் நெருங்கிய நண்பர்கள். கிருஷ்ணசாமி இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் பொன்ராஜ் விக்னேஷ் செல்போனில் பேசினாராம். இதையறிந்த கிருஷ்ணசாமி தனது நண்பரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விருதுநகர் நிறைவாழ்வு நகர் பகுதியில் பாலத்துக்கு அடிப்புறம் ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக கருகி கிடந்தது பொன்ராஜ் விக்னேஷ் என தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரது தந்தை கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணசாமி, அவரது நண்பர் அன்பு செல்வம் (23) ஆகியோரை இன்று காலை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இருவரும் சேர்ந்து பொன்ராஜ் விக்னேஷை கொலை செய்து, பாலம் அடியில் குப்பை குவியலில் சடலத்தை வைத்து எரித்தது தெரியவந்தது. மேலும், எப்படி கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: