காரியாபட்டி: காரியாபட்டி அருகே, பட்டப்பகலில் கொத்தனார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரைச் சேர்ந்தவர் கொத்தனார் ராமசாமி (32). இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ராமசாமி தினமும் மதுரைக்கு வேலைக்கு சென்று வந்தார். வழக்கம்போல் இன்று காலை டூவீலரில் வேலைக்குச் சென்றார். ஆவியூர் மெயின் ரோட்டில் காலை 8.30 மணியளவில் வந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் டூவீலரை வழிமறித்து தகராறு செய்துள்ளது.
பின் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ராமசாமியின் கழுத்து, கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளது. இதைப்பார்த்து சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆவியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமசாமிக்கும், அவரது சித்தப்பாவிற்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா போலீசார் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் கொத்தனார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரியாபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
