சிவகாசி ஜன. 7: சிவகாசியில் நடந்த சாலை விபத்தில் டீக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். திருத்தங்கல் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ்(80). இவர் சம்பவத்தன்று பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் மீது மோதி படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தையும் அதை ஓட்டி வந்த நபரையும் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் (39). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று எம். மேட்டுப்பட்டியில் இருந்து பெருமாள் கோயில் அருகில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே ரோட்டில் டூவீலரில் வந்த ஆமத்துரை சேர்ந்த செல்வகுமார்(40) என்பவர் முத்துராஜ் மீது மோதினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். முத்துராஜ் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செல்வகுமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
