சின்சினாட்டி: அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சின்சினாட்டி இல்லத்தில் மர்ம நபர் ஒருவர் சுத்தியலால் தாக்குதல் நடத்திய சம்பவம் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வார இறுதி விடுமுறைக்காகச் சின்சினாட்டி வந்திருந்தனர். இந்நிலையில் சின்சினாட்டியின் ஈஸ்ட் வால்நட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வான்ஸின் வீட்டின் அருகே, நேற்று நள்ளிரவில் திடீரெனப் பயங்கர சத்தம் கேட்டது.
அங்குப் பாதுகாப்பில் இருந்த அமெரிக்க ரகசியப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகச் சென்று பார்த்தனர். அப்போது வில்லியம் டிஃபோர் (26) என்ற நபர், கையில் வைத்திருந்த சுத்தியலால் வீட்டின் ஜன்னல்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார். வீட்டின் 4 ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளின் வாகனம் ஒன்றையும் அவர் சேதப்படுத்தினார். உடனடியாக அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்த அதிகாரிகள், அவரிடமிருந்த சுத்தியலைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜே.டி. வான்ஸ், ‘பைத்தியக்கார நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைய முயன்றார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மீது அத்துமீறி நுழைதல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
