2-3 வாரங்களில் தாக்குதலை நிறுத்த டிரம்ப் திட்டம் ஈரான் போர் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு: முடிவு எட்டப்படாமல் பின்வாங்குகிறது அமெரிக்கா; ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதிலும் படுதோல்வி

துபாய்: ஈரானுக்கு எதிரான போரை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் நிறுத்திக் கொள்வதாக கூறி உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளார். ஈரான் தன்னிடம் உள்ள யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்கும் கட்டத்திற்கு மிக நெருக்கமாக சென்று விட்டதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 நாட்கள் சண்டையிட்டது. அதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. அதைத் தொடர்ந்து, பொருளாதார சீர்குலைவால் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், ஈரானில் தலைமையை மாற்றுவதற்காக மீண்டும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது போர் தொடுத்தது.

போரின் முதல் நாளிலேயே ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையிலும், அமெரிக்காவிடம் ஈரான் பணியவில்லை. அதோடு இஸ்ரேல் மீது மட்டும் பதில் தாக்குதல் நடத்தாமல், ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் அரபு நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. மேலும், எண்ணெய், எரிவாயுவின் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்காவிலும் பெட்ரோல், டீசல் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் உள்நாட்டிலும் டிரம்புக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

ஹார்மஸ் ஜலசந்தியை திறக்க ஒப்பந்தம் செய்ய வேண்டுமென பல வழிகளில் டிரம்ப் மிரட்டியும், கூடுதல் படைகளை அனுப்பியும் ஈரான் பணியவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது பிடியையும் விடவில்லை. இந்த விஷயத்தில் நட்பு நாடுகளிடம் உதவி கேட்டும் டிரம்புக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இதற்கிடையே, ஏப்ரல் 1ம் தேதி முதல் அரபு நாடுகளில் உள்ள கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய பெரிய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்த நிலையில், வேறு வழியின்றி பின்வாங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஓவல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: ஈரான் கற்காலத்திற்கு தள்ளப்படும். இனி அவர்களால் பல ஆண்டுகளுக்கு அணு ஆயுதத்தை தயாரிக்க முடியாது என்பது உறுதியானதும் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் ராணுவ தாக்குதலை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டுமென்ற அவசியம் இல்லை. எங்கள் நோக்கங்கள் நிறைவேறியதும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி விடுவோம்.

கடந்த ஆண்டு நடந்த தாக்குதலிலேயே ஈரானின் அணு சக்தி திட்டங்களை நாங்கள் அழித்து விட்டோம். எனவே மிக குறுகிய காலத்தில் எங்கள் பணியை முடித்துவிடுவோம். ஈரானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு பெட்ரோல் விலை கணிசமாக குறையும். ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாததால் மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஹார்முஸ் ஜலசந்திக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த வழியாக எண்ணெய் வளங்களை கொண்டு செல்ல விரும்பும் நாடுகளே அதை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஈரான் போர் குறித்து இன்று காலை இந்திய நேரப்படி 6.30 மணிக்கு அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறினார். எனவே, இப்போரில் இருந்து விரைவில் பின்வாங்குவதில் டிரம்ப் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், அமெரிக்கா ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை அறிவித்தால், ஈரானும் அதைப் பின்பற்றுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதே சமயம், ஈரான் போர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையேயான நட்பை சீர்குலைத்துள்ளது. எனவே ஐரோப்பிய நாடுகளுடனான நேட்டோ படையிலிருந்து அமெரிக்கா விலகும் முடிவையும் டிரம்ப் எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மீண்டும் குழப்புகிறார்
அடுத்த 2-3 வாரத்தில் தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறிய நிலையில் நேற்று மாலை அவர் ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘தனது முன்னோடிகளை விட மிகவும் தீவிரமயமற்றவராகவும் மிகுந்த புத்திசாலியாகவும் திகழும் ஈரானின் புதிய அதிபர், அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கேட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி திறந்த, தடையற்ற, தெளிவான நிலையில் இருக்கும் போது அதை நாங்கள் பரிசீலிப்போம். அதுவரை நாங்கள் ஈரானை முற்றிலும் அழிப்போம், அவர்களை கற்காலத்திற்கு அனுப்புவோம்’’ என கூறி உள்ளார். ஈரானில் புதிய அதிபராக யாரும் மாறவில்லை. எனவே டிரம்ப் யாரை குறிப்பிடுகிறார், மீண்டும் ஈரானை அழிப்பதாக ஏன் கூறுகிறார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

* முன்னாள் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
அமெரிக்க, இஸ்ரேல் படைகள் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது நேற்று நடத்திய தாக்குதலில் தலேகானி தெருவில் உள்ள பிரமாண்டாமான அமெரிக்காவின் முன்னாள் தூதரகத்தை குறிவைத்தன. இதில் தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறியிருப்பதை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர். 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தத் தூதரகம் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தன்னார்வலர்களைக் கொண்ட பசிஜ் படை இந்த வளாகத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

* ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க இங்கி. முயற்சி
ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்ப் கைவிட்ட நிலையில், அதை மீண்டும் திறப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுப்பதில் இணைந்து செயல்பட 35 நாடுகள் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்த மாநாட்டிற்கு இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் யெவெட் கூப்பர் தலைமை தாங்க உள்ளார். ஈரான் போர் முடிந்தவுடன் பாதுகாப்புக்கான திட்டங்களை வகுப்பது குறித்து மாநாட்டில் பேசப்பட உள்ளது.

* 33ம் நாள் போரில்…
போரை விரைவில் நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையிலும், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நேற்றும் தாக்குதல் நடத்தியது. 33வது நாளான இப்போரில் கத்தார் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீதும், குவைத் விமான நிலையம் மீதும் டிரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதே போல, லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை இப்போரில் ஈரானில் 1,900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேலில் 19 பேரும் 13 அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

* ஈரான் தொடர்ந்து போராட தயார்
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஏப்ரல் 6ம் தேதி வரை டிரம்ப் கெடு விதித்துள்ளார். இல்லாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவோம், கார்க் தீவு கைப்பற்றப்படும் என மிரட்டி உள்ளார். இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஈரானிடம் அச்சுறுத்தல்கள் மற்றும் காலக்கெடு மொழியில் பேச முடியாது. அமெரிக்கா என்ன அச்சுறுத்தினாலும் தொடர்ந்து போரிடுவதற்கு தயாராக இருக்கிறோம். அமெரிக்கா இனியும் தரைவழி தாக்குதல் நடத்த துணிவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி செய்தால் மிகப்பெரிய உயிரிழப்புகள் அவர்களுக்கு காத்திருக்கும். எப்போதும் நாங்கள் அமெரிக்காவை நம்ப மாட்டோம். அதனால் நேரடி பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம். உண்மையில் பாரசீக வளைகுடா மக்களை மனித கேடயங்களாக அமெரிக்கா பயன்படுத்துகிறது’’ என்றார்.

Related Stories: