அட்டாக் லிஸ்ட்டில் இல்லாத அமேசான் நிறுவனத்தின் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியுள்ள ஈரான்.!!

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரித்திருந்த நிலையில், பஹ்ரைனில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மையத்தின் மீது ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் வளைகுடாவின் வர்த்தக தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை இந்த தகவல் உறுதிபடுத்தி உள்ளது.

சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, பஹ்ரைனில் உள்ள அமேசானின் கிளவுட் செயல்பாடுகள் ஈரானின் தாக்குதலால் சேதமடைந்துள்ளன. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக ஈரான் விடுத்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய கிழக்கில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படம் என்று எச்சரித்து ஒருசில நிறுவனங்களின் பெயர்களை ஈரான் புரட்சிகர காவல்படை வெளியிட்டிருந்த நிலையில், அந்த பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் பெயர் இடம்பெறவில்லை. ஈரான் குறிவைக்கத் திட்டமிட்டிருக்கும் முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள், கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட், ஹெச்பி, டெஸ்லா, என்விடியா, ஆரக்கிள், போயிங், ஐபிஎம், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்களே இடம் பெற்றிருந்தன. ஆனால் இதற்கு முன்னர் மார்ச் 1 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு AWS தரவு மையங்களை ஈரானிய ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ள சம்பவம் நிகழ்ந்திருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனிடையே இந்த போர் சூழலில் அமெரிக்க ராணுவம் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அதிகளவில் சார்ந்திருப்பதால், முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தரவு மையங்கள் ஈரானின் முக்கிய இலக்குகளாக மாறி வருகின்றன. குறிப்பாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்தது மற்றும் ஈரான் மீதான  ராணுவத் தாக்குதல்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் அமெரிக்க ராணுவம் பகுப்பாய்வு மற்றும் செயல்பாட்டு ஆதரவிற்காக செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தியாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி இருக்கின்றன.

எங்கள் எதிரியின் ராணுவ மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் தரவு மையங்களும் இனி எங்கள் தாக்குதல் இலக்கு பட்டியலில் இடம்பிடிக்கும் என்று ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. போரின் போது, ​​வணிகரீதியான கிளவுட் தரவு மையங்களைக் குறிவைத்து ஒரு அரசு தரப்பு நடத்திய முதல் உறுதிசெய்யப்பட்ட நேரடி ராணுவத் தாக்குதல் இதுவாகும். இது உலகளாவிய டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பாதிப்புக்குள்ளாகும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

Related Stories: