- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- நாகர்கோவில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மத்திய அமைச்சர்
- Pon.Radhakrishnan
- கன்னியாகுமாரி
நாகர்கோவில்: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான நாகர்கோவிலில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாகவே குமரி மாவட்டத்தில் தீவிர களப்பணியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். தற்போது இத்தொகுதியின் எம்எல்ஏவாக பாஜவின் எம்.ஆர்.காந்தி உள்ளார். இருப்பினும், கட்சியின் மேலிடம் மூத்த தலைவரான பொன். ராதாகிருஷ்ணனைச் சட்டமன்றத்திற்கு அனுப்பத் திட்டமிட்டால், அவருக்கு இந்தத் தொகுதியில் முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. பொன்.ராதாகிருஷ் ணன் பெரும்பாலும் கன்னியாகுமரி (முன்பு நாகர்கோவில்) மக்களவை தொகுதியிலேயே போட்டியிட்டுள்ளார்.
1991ல் நாகர்கோவில் தொகுதியில் முதன்முறையாக பாஜ வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1996, 1998 தேர்தல்களில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1999ல் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் வாஜ்பாய் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகப் பணியாற்றினார். 2004ல் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினிடம் தோல்வியடைந்தார். 2009ல் தொகுதி வரையறைக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2014ல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் மீண்டும் ஒன்றிய அமைச்சராகப் பணியாற்றினார். 2019 கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எச்.வசந்தகுமாரிடம் (காங்.) தோல்வியடைந்தார். 2021 (இடைத்தேர்தல்) எச்.வசந்தகுமார் மறைவால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவரது மகன் விஜய் வசந்த்திடம் தோல்வியடைந்தார்.
2024ல் கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு விஜய் வசந்திடமே தோல்வியடைந்தார். இதற்கிடையே 2011ல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தற்போது, 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் அவர் போட்டியிட விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது களத்தில் உள்ள எம்.ஆர்.காந்தியும் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் களம் காணவே ஆர்வம் காட்டி வருகிறார். அதே நேரத்தில் நாகர்கோவில் தொகுதியில் சீட் பெற வேண்டும் என்று இளம் தலைவர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
