×

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி உள்பட 7 பேர் விடுதலை: விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி உள்பட 7 பேரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில்(2006-2011 திமுக ஆட்சியில்) விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும்,

இதனால் அரசுக்கு ரூ28,36,40,000 வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ அவரது மகன் கொளதமசிகாமணி மற்றும் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2012ல் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது லோகநாதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், சப்-கலெக்டர் உள்ளிட்ட அரசு தரப்பு சாட்சிகள் 57 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சி விசாரணை முடிந்ததையடுத்து ஏப்.2ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி மணிமொழி அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி உள்பட 7 பேரும் ஆஜரானார்கள். அப்போது நீதிபதி மணிமொழி, இந்த வழக்கில் மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்குப்படுவதாக கூறி ஒத்திவைத்தார். மாலையில் தீர்ப்பளித்த நீதிபதி, முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட செம்மண் குவாரியில் அதிகாரிகள் கூட்டுபுலன் தணிக்கை அறிக்கை சந்தேகத்திற்கிடமாக இருக்கிறது.

செம்மண் எடுத்த பகுதி ஏற்கனவே மண் அள்ளப்பட்ட பள்ளமான பகுதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குவாரிக்கு அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர் உள்பட 57 சாட்சிகளில் 33 சாட்சிகள் பிறழ்சாட்சியம் அளித்துள்ளனர். முறைகேடு செய்ததற்கான போதிய ஆவணங்கள், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் எதிரிகளுக்கு சந்தேகத்தின் முழுபலனை அளித்து 7 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் 14 ஆண்டாக விசாரணை நடைபெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ponmudi ,Semman ,Atamuga ,Viluppuram District Primary Sessions Court ,Viluppuram ,Gaudhamasikamani ,Adimuga ,Viluppuram District ,
× RELATED சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு...