×

உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில் பிரதமர் மோடியின் சென்னை பிரசாரம் ரத்து: அண்ணாமலை போட்டியிட போவது இல்லை என்ற அறிவிப்பால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

* நிர்வாகிகளுடன் மட்டும் ஆலோசனை

சென்னை: உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில் பிரதமர் மோடியின் சென்னை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இன்னும் நாளையும், 6ம் தேதி மட்டும் தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் சாத்தூரில் மட்டும் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது என்பது இறுதியாகி விட்டது. அவரே நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எடப்பாடி பிரசாரத்தின் போது கூட அவருடன் தமிழிசை தான் வாக்குகளை சேகரித்தார். ஆனால், சென்னையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் மற்ற தொகுதிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் அனைவரும் தற்போது மயிலாப்பூர் தொகுதியை எதிர்பார்த்து இருந்து வருகின்றனர்.

மீதியுள்ள 26 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தினார். கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடந்த மையக்குழு கூட்டத்தில் ஒரு தொகுதிக்கு 3 பேர் என வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் பாஜ வேட்பாளர்கள் பட்டியலை எந்த நேரத்திலும் கட்சி தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அந்த வேட்பாளர் பட்டியலில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இருக்கிறதா, அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் பாஜ தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. கட்சி மேலிடம் அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறார். கோவை வடக்கு தொகுதியில் நான் தான் வேட்பாளர் என்று வானதி சீனிவாசன் பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

இதனால், இந்த தொகுதி அண்ணாமலைக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அண்ணாமலையும் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அண்ணாமலை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ‘தீவிர பிரசாரம் செய்வேன்’ என கட்சி மேலிடத்தில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சென்னையில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 3.20 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து, உடனடியாக மாலை 3.25 மணியளவில் தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். அங்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, மாலை 6.40 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து காரில் புறப்பட்டு, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று இரவு தங்குகிறார். தொடர்ந்து, நாளை (4ம்தேதி) காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை, கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, பகல் 1.10 மணியளவில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து, காரில் புறப்பட்டு பகல் 1.20 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பின்னர், அங்கிருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மேலும் பாஜ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜ நிர்வாகிகள் சந்திப்பில் 150 பேர் வரை பங்கேற்பதாக இருந்த நிலையில் அக்கூட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். சென்னை வரும் பிரதமர் மோடி சென்னை மயிலாப்பூரில் பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருந்தார். ரோடு ஷோவில் ஈடுபட போவதாக முதலில் தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிரதமரின் சென்னை பிரசாரம், ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜ போட்டியிடும் தொகுதிகளில் படு தோல்வியை சந்திக்கும் என்று வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியும் கடந்த முறையை விட குறைவான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் வருகிறது. அது மட்டுமல்லாமல் பாஜவில் உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது. இதனால் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் கட்சியினரே தோற்கடிக்கும் நிலை என்பது இருந்து வருகிறது. மேலும் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மோதல் என்பதும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் பிரசாரம் செய்தால் தனக்கு தான் கெட்ட பெயர் வரும் என்று பிரதமர் மோடி கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், தான் அவர் சென்னை பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 7 முறை தமிழகத்தில் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்படியிருந்தும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜ வெற்றி பெறவில்லை. பல இடங்களில் டெபாசிட் பறிபோனது தான் மிச்சம்.

பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்தும் பாஜவால் வெற்றி பெற முடியவில்லையே என்ற விவாதம் இன்னும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வர தயங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் 2 நாட்கள் சென்னை பயணத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில், குறிப்பாக பழைய விமான நிலைய பகுதி முழுவதும், முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags : Modi ,Chennai ,Annamalai ,Tamil Nadu Assembly ,
× RELATED எடப்பாடிக்கு 2வது இடம்தான்: செல்லூர்ராஜூ ஓபன் டாக்