×

வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மீது ரூ.600 கோடி மோசடி வழக்கு: 13 பிரிவுகளின்கீழ் பதிவு

திருப்பத்தூர்: வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மீது 13 பிரிவுகளின் கீழ் ரூ.600 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சையத் புர்ஹாதீன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தற்போது அம்பலமாகி வருகிறது.

குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போலி நிறுவனங்கள் நடத்தி சுமார் ரூ.600 கோடி மோசடி செய்தாக அவர் மீது சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஜராக அவருக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் தனது உடல் நலம் காரணம் காட்டி ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் வாணியம்பாடியில் உள்ள இவரது வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் வேட்பாளர் சையத் புர்ஹாதீன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டு நிலுவையில் உள்ளது. இதுகுறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு தவெக சார்பில் சீட் வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையத் புர்ஹாதீன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இதெல்லாம் உண்மைக்கு புறம்பானவை. நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற அச்சத்தில் தீய சக்திகள் அவதூறு பரப்பி வருகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. பொய்யான தகவல்களை பரப்புவோரை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என்றார்.

* தவெக வேட்பாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் பறக்கும்படை குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் ரூ.1.05 லட்சம் இருந்தது. வாகனத்தில் இருந்தவரிடம் விசாரித்த போது, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் அப்துல் ஜலீல் (45) என்பதும், சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த இவர், வேட்புமனு தாக்கலுக்காக வந்ததும் தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் உரிய ஆவணங்களை காண்பித்தபின் வேட்பாளரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

Tags : Tevaga ,Vaniyambadi ,Tirupattur ,Tamil Nadu ,
× RELATED எடப்பாடிக்கு 2வது இடம்தான்: செல்லூர்ராஜூ ஓபன் டாக்