கோவை: விலை உயர்வு காரணமாக தங்கம் விற்பனை 70 சதவீதம் வரை குறைந்துள்ள நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் காரணமாக மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தங்க நகை தயாரிப்பு உற்பத்தியில் மும்பை முதலிடத்திலும், கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக கோவை நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் நகை பட்டறைகள் உள்ளன. சிறிய, பெரிய, நடுத்தரம் என 3,500 நகை கடைகள் உள்ளன. தமிழகத்தில் கோவைக்கு அடுத்தபடியாக சென்னை மற்றும் மதுரையில் நகை தயாரிப்பு உற்பத்தி அதிக அளவு செய்யப்படுகிறது. கோவையில் இருந்து மட்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஆண்டுக்கு 100 டன் தங்க நகைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தங்க நகை தொழிலை மட்டுமே நம்பி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். கோவையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1 லட்சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலை நம்பி உள்ளனர். தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால், கோவையில் மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு டன் தங்கம் விற்பனை சரிந்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் நாடு கடத்தப்பட்டு அமெரிக்காவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக தங்கம் மீதான விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்களிடையே தங்கம் வாங்கும் சக்தி குறைந்து தங்க நகை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: கோவை மாநகர் பகுதியில் மட்டுமே 350க்கும் மேற்பட்ட தங்க நகை கடைகள் உள்ளன. சுமார் 60 ஆயிரம் பொற்கொல்லர்கள் உள்ளனர். தினமும் 100 கிலோ தங்கம் வியாபாரம் கோவையில் நடக்கும். விலை ஏற்றம் தொடர்வதால் 70 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. கடந்த மாதம் சுமார் 1 டன் அளவில் தங்கம் விற்பனை சரிந்துள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களிடையே தங்கம் வாங்கும் திறன் பெருமளவு குறைந்துள்ளது. 10 பவுன் வாங்க வருவோர் 5 பவுன் தான் வாங்கும் நிலையில் உள்ளனர். வெனிசுலா மீதான தாக்குதலால் தங்கம் விலை மேலும் 3 சதவீதத்திற்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தங்க நகை விற்பனை குறைந்து வேலை இழப்புகள் ஏற்படும். இதிலிருந்து மீண்டு வர, ஒன்றிய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை ஒரு சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
