நெல்லை: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் குற்றால அருவிக்கு செல்ல முடியாதபடி கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றால அருவிகளில் நேற்றிரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தாலும், அதிகளவில் தண்ணீர் விழுவதால் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு மழையுடன் தொடங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. லட்சதீவு-குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவிகளில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 2 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவசைலத்தில் 24 செ.மீ. மழை அயன் தர்மபுரம் மடத்தில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லையில் இரவு முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். காலையில், மணிமுத்தாரு அருவிக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
