ஊட்டியில் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் ஆந்தூரியம் பூக்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள ஆந்தூரியம் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில், முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மலர் தொட்டிகளில் மண் நிரப்பும் பணி, நாற்று நடவு பணி நடைபெற்று வருகிறது.

இதனால் பூங்காவில் மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதே சமயம் கண்ணாடி மாளிகையில் பல்வேறு மலர்களைக் கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. நுழைவாயில் பகுதியில் ஆந்தூரியம் மலர்களைகொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த மலர்கள் இதயம் போன்று காட்சியளிப்பதால் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை குடிலில் வளரக்கூடிய இந்த மலர்கள் தற்போது அதிக அளவு பூத்துள்ளதால் இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: