சென்னை: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரூர் – பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உள்ள 10 ரயில் நிலையங்களில் 5 அடி உயர நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடந்து வருகின்றன.
இதில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடம் 4ல் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையின் இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் மற்றும் கட்டிட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் போரூர் – பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
இதற்காக இவ்வழித்தடத்தில் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 13 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் இந்த வழித்தடத்தில் 30 ஓட்டுநர்கள் வரை மெட்ரோ ரயிலை இயக்குகின்றனர். மேலும் போரூர் -பூந்தமல்லி வழித்தடத்தில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே சென்னை சென்ட்ரலில் இருந்து சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான நீண்ட பாதைகளில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், போரூர் – பூந்தமல்லி வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ஆளில்லா மெட்ரோ இயக்கப்படுவதாலும் பூந்தமல்லி-போரூர் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில், முதல் கட்ட திட்டத்தில் இல்லாத 5 அடி உயர நடைமேடை தடுப்பு கதவுகள் (half-height platform screen doors) அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு தடுப்புகள், இரண்டாம் கட்ட திட்டத்தின் வழித்தடங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போரூர் -பூந்தமல்லி வழித்தடத்தில் உள்ள பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு ஆகிய 10 ரயில் நிலையங்களில் 5 அடி உயர நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த அறை உயர நடைமேடை தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக, புதிய ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயண சீட்டுகள் வாங்குவதற்கும், ரயில் நிலையங்களுக்குள் நுழைவதற்கும் எளிதான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வழித்தடம், சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
