சென்னை: சட்டவிரோத மணல் மற்றும் கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2020ம் ஆண்டு முதல் 2025 நவம்பர் வரை மொத்தம் 1439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, நீதிபதிகள் எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை.
ஐந்து கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக கனிமவளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது. அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு கனிமவள கொள்ளை கும்பல் மாபியா போல் செயல்படுகிறது. மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பாகும். இது தொடர்பாக புகாரளிக்காத வருவாய் துறை அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் மற்றும் கனிமவள கொள்ளை குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அறிக்கை ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டவிரோத மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுக்க திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
