அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: பதில் தர உத்தரவு

சென்னை: அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு காலக்கட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில், அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் உள்ளிட்டோரை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் பெரியசாமி, அவரது மகனும் பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார், மகள் இந்திரா உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ. அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சொத்துகளை முடக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்தும் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த மனுவை தாக்கல் செய்த பின்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது என்று வாதிட்டார். அப்போது, இந்த மனுவுக்கு பதில் தர அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் கோரினார். இதையடுத்து, அமலாக்கத்துறை பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: