புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 6 பேர் மீதும், 2 பாக். பயங்கரவாத அமைப்புகள் மீதும் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, ‘தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட்’ பொறுப்பேற்றது.
கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது தெரியவந்தது.இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், உள்ளூர்வாசிகளான பஷீர் மற்றும் பர்வேஸ் ஜோதர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு மற்றும் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1,597 பக்க குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் ஜாட்டும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மூவரும் பைசல் ஜாட் என்கிற சுலேமான் ஷா, ஹபீப் தாஹிர் என்கிற ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தக் குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்ட ஆழமான சதித்திட்டத்தை விவரிக்கிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்ததற்கான தண்டனைப் பிரிவுகளையும் சேர்த்துள்ளது.
