ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் பெற்றோரின் வருமானத்தை வைத்து தீர்மானிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 

புதுடெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் ஓபிசி நான் கிரிமிலேயர் ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் பெற விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களின் பெற்றோர் அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரிந்து அதிக சம்பளம் பெறுவதாக கூறி பணியாளர் பயிற்சித் துறை அதிகாரிகள் அவர்களை கிரிமிலேயர் பட்டியல் இணைத்துள்ளனர். இதனால் அவர்கள் ஓபிசி இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஒருவரை ஓபிசி கிரிமிலேயர் அல்லது நான் ஓபிசி கிரிமிலேயர் தீர்மானிப்பதில் பெற்றோரின் பதவி, சமூக நிலை மற்றும் சேவை நிலை போன்ற காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரிமிலேயர் என வகைப்படுத்துவது என்பது சரியான நடைமுறை கிடையாது’’ என்று தெளிவுபடுத்தி உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: