புதுடெல்லி: நாடு முழுவதும் நடந்த எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாகவும், இதற்குத் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்தான் காரணம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. இதைத் தொடர்ந்து அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை திரிணமூல் காங்கிரஸ் கொண்டு வரும் என்று அந்த கட்சி அறிவித்தது.
விதிகளின்படி தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்குவதற்கான நோட்டீசில் குறைந்தது 100 எம்பிக்கள் கையெழுத்திட வேண்டும். மாநிலங்களவையில் 50 உறுப்பினர்களின் கையெழுத்து தேவை. இந்த மனுவில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர். மக்களவையில் 130 உறுப்பினரும், 63 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுகுறித்து உயர் வட்டாரங்கள் கூறுகையில்,’ஞானேஷ்குமாருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும். இந்த தீர்மானம் முதலில் கொண்டுவரப்படுவது மாநிலங்களவையிலா அல்லது மக்களவையிலா என்பது தெளிவாக தெரியவில்லை’ என்றன.
