புதுடெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சப்ளையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார். நாடு முழுவதும் நிலவும் சமையல் காஸ் தட்டுப்பாடு பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியதற்கு பதில் அளித்து ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி பேசினார்.
அவர் கூறியதாவது: வதந்தி பரப்புவதற்கோ அல்லது போலி கதைகள் பரப்புவதற்கோ இது சரியான தருணம் அல்ல. மிகக் கடுமையான உலகளாவிய எரிசக்தி சீர்குலைவை இந்தியா கடந்து செல்கிறது. கச்சா எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது. வீடுகளுக்கு எரிவாயு சப்ளை செய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பள்ளிகள் திறந்திருக்கும். பெட்ரோல், டீசல் சப்ளை உரிய அளவு செய்யப்படுகிறது உள்ளது.
கச்சா எண்ணெய் தற்போது 40 நாடுகளில் இருந்து பெறப்படுகிறது, 2006-07 ஆம் ஆண்டில் 27 நாடுகளிலிருந்து பெறப்பட்டது, இது நாட்டிற்கு பன்முகப்படுத்தப்பட்ட விநியோக கலவையின் நன்மையை அளிக்கிறது. நவீன எரிசக்தி வரலாற்றில் இதுபோன்ற ஒரு தருணத்தை உலகம் சந்தித்ததில்லை. ஆனால் நமது நாட்டில் விநியோகம் சீராக உள்ளது. சமையல் காஸ் சப்ளையில் 25 நாட்கள் குறைந்தபட்ச முன்பதிவு இடைவெளி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 45 நாட்களாக உள்ளது. வணிக எல்பிஜி விநியோகம் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்க ஒழுங்குபடுத்தப்பட்டது.
33 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களின், குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் சமையலறைகள் எந்த எரிவாயு பற்றாக்குறையையும் சந்திக்காமல் இருப்பது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான டர்பைன் எரிபொருள் அல்லது எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறை இல்லை.
இந்த நெருக்கடிக்கு முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45 சதவீதம் ஹார்முஸ் பாதை வழியாக சென்றது. ஹார்முஸ் அல்லாத கச்சா எண்ணெய் இறக்குமதி தோராயமாக 70 சதவீதமாக உயர்ந்துள்ளது, மோதல் தொடங்குவதற்கு முன்பு இது 55 சதவீதமாக இருந்தது. தற்போது எல்பிஜி கொள்முதல் அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா மற்றும் ரஷ்யாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
கடந்த ஐந்து நாட்களில், சுத்திகரிப்பு உத்தரவுகள் மூலம் எல்பிஜி உற்பத்தி 28 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கான எல்பிஜி சிலிண்டர்களுக்கான முன்பதிவு முதல் டெலிவரி வரை நிலையான சப்ளை நேரம் 2.5 நாட்களாகவே உள்ளது. நெருக்கடிக்கு முந்தைய விதிமுறைகளிலிருந்து மாறாமல் உள்ளது . இவ்வாறு தெரிவித்தார்.
* மாநிலங்களுக்கு கூடுதலாக 40,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு
ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், “நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகம் சரியாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் பெட்ரோல் பம்புகளில் எதிலும் தற்போது வறண்ட நிலை இல்லை. மேலும், எரிவாயு சிலிண்டருக்கு மாற்று எரிபொருளாக கூடுதலாக 40,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சில வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மாநில அரசுகளால் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
