மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் சம்மந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற தாமதம் ஏன்? தமிழக பொதுத்துறை செயலாளர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து ஜனவரி 6ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு தமிழக பொதுத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அதிகாரிகள், முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற்ற நிலையில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?. இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரிய ஆவணங்கள் மீது, பொதுத்துறை செயலாளர் 29 மாதங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது. தேர்தல்களின் போது, ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சிகள் கூறிய நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறாமல், வழக்கில் ஆதாரங்களை சேகரித்து என்ன பயன்?. இதன் காரணமாக வழக்கு விசாரணையை நீதிமன்றம் துவங்க முடியாத நிலையில் உள்ளது. எனவே, இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக, 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து தமிழக பொதுத்துறை செயலாளர் விளக்கமளிக்க வேண்டும். வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி ஆவணங்களை அனுப்பியதுடன் நின்று விடாமல், அதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நினைவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று விஜிலன்ஸ் ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆகியோர் விளககம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: