விளிம்புநிலை மக்களுக்கும் சிறப்பு நிதி வழங்கியது வரவேற்புக்குரியது: தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும், அரசின் மாத ஓய்வூதியத் உதவித் தொகைகளை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2ஆயிரத்தை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசு வரவு வைத்துள்ளது.

இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா ரூ.32ஆயிரமும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3,500, பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 நேற்று தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித் தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8,000 வீதம், மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிதி உதவிகளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: