இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம் சென்னையில் 4வது நாளாக 31 விமானங்கள் ரத்து

சென்னை: இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக சென்னையில் 4வது நாளாக 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட்டுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 33 விமானங்கள் ரத்தானது. கடந்த திங்கட்கிழமை 36 விமானங்கள் ரத்தானது.இந்நிலையில், 4வது நாளாக நேற்று, ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டிய 16 புறப்பாடு மற்றும் 15 வருகை விமானங்கள் என மொத்தம் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரம் போன்றவைகளை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தி உள்ளனர். சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

Related Stories: