×

கடவுளிடமும் கொள்ளையடிக்கிறது புதுச்சேரி அரசு: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து உங்களை சந்திக்காதது தவறு. புதுச்சேரி மக்களின் அன்புக்காக அடிக்கடி இங்கு வருவதற்கு ஆசைப்படுகிறேன். புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மக்களால் ஆளப்படவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. புதுச்சேரி மக்களின் எண்ணத்தின்படி புதுச்சேரி அரசு அமையவில்லை, மாறாக டெல்லியில் இருந்து திணிக்கப்படுகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை.

புதுச்சேரியை டெல்லியில் இருந்து துணை நிலை ஆளுநர் மூலம் ரிமோட் கன்ட்ரோல் செய்கிறது பாஜக; உள்ளூர் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டது பாஜக; உள்ளாட்சி தேர்தலை புதுச்சேரியில் நடத்தவில்லை. புதுச்சேரியை அதானிக்கு விற்க பார்க்கிறது பாஜக. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே அதானிக்கு விற்கப்பட்டுவிட்டது. புதுச்சேரி மின்வாரியம் அதானிக்கு விரைவில் விற்கப்பட இருக்கிறது. புதுச்சேரியில் போலி மருந்து தயாரிக்கப்படும் நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதுச்சேரியில் ஊழல் உயிரை பறிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஒப்பந்தத்துக்கும் புதுச்சேரியில் 30 சதவீதம் கமிஷன். வசூல் ஏஜெண்டாக மாறி, கமிஷன் வாங்குவது மட்டுமே புதுச்சேரி அரசின் வேலையாக உள்ளது. கமிஷன் வாங்கிக் கொண்டு மதுபான கடைகளுக்கான உரிமங்கள் விற்கப்படுகின்றன. பள்ளி, கோயில்கள் அருகே மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன. கோயில் நிலங்களை அபகரித்து விட்டனர். கடவுளிடமும் கொள்ளையடிக்கிறது புதுச்சேரி அரசு; புதுச்சேரியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, பெண்கள், குழந்தைகள் இரவில் நடக்க அஞ்சுகின்றனர்

பள்ளி மாணவர்களிடையே போதைப்பழக்கம் தலைவிரித்தாடுவதாக துணை நிலை ஆளுநரே ஒப்புக் கொண்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். தனியார், பொதுத்துறையிலும் 30,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். புதுச்சேரியில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அறிமுகம் செய்வோம். புதுச்சேரியில் அரசு வேலையில் சேருவதற்கான வயது வரம்பு 40ஆக தளர்த்தப்படும். அரசு காப்பீட்டு திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை சிகிச்சை பெற திட்டம் கொண்டு வரப்படும்

எந்த வகையான இருதய பாதிப்போ புற்றுநோயோ எந்த பாதிப்பு என்றாலும் ரூ.20 லட்சம் வரை சிகிச்சை மேற்கொள்ளலாம். புதுச்சேரியில் 6 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அரசில் புதுச்சேரி மக்களின் குரல் ஒலிக்க வேண்டும். புதுச்சேரியை துணை நிலை ஆளுநர் மன்னர்போல் ஆட்சி செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மக்களின் உண்மையான குரலை பிரதிபலிக்கக் கூடிய அரசை புதுச்சேரியில் அமைப்போம். காங்கிரஸ் – திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Tags : Puducherry ,God ,Rahul Gandhi ,Rakul Gandhi ,Lok Sabha ,Congress ,Dimuka alliance ,
× RELATED எடப்பாடி ஆட்சியில் நடந்த...