கவுகாத்தி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐபிஎல் 2026 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என்பதை அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே உறுதிப்படுத்தியுள்ளார். நாளை கவுகாத்தியில் உள்ள ஏசிஏ மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
தற்போது உடல்நலம் தேறியுள்ள பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை இரவு கவுகாத்தியில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முழு வீச்சில் செயல்பட்டார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பரஸ் மாம்ப்ரே, “ஹர்திக் பாண்டியா அடுத்த போட்டியில் விளையாடுவார். நேற்று அவர் இரண்டு மணி நேரம் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அவர் தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை, உடல்நலக்குறைவு காரணமாகவே கடந்த போட்டியில் விளையாடவில்லை,” என்று தெளிவுபடுத்தினார்.
