×

இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 6 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி: 45 நாட்கள் போர் நிறுத்த முன்மொழிவு செல்லுமா?

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அருகே உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது பயங்கர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கோரத் தாக்குதலில் 10 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகள், 2 சிறுவர்கள் என மொத்தம் 6 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஈரான் அரசு இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணை வீச்சில் வடக்கு இஸ்ரேலின் ஐஃபா பகுதியில் 2 பேர் பலியாகினர். இதற்கிடையே, வளைகுடா போர் பதற்ற நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து 45 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளன. இது தொடர்பாக ஈரான் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஒப்பந்தத்தை சந்தேகத்துடனேயே பார்க்கிறோம்.

போர் நிறுத்தம் என்று கூறிவிட்டு காசா பகுதியில் நடத்தியது போன்ற தாக்குதல்களை மீண்டும் நடத்த அமெரிக்கா திட்டமிடுகிறதோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது’ என்று கூறினர். மறுபுறம், அமெரிக்க அதிபர் டிரம்ப், நாளை இரவு 8 மணி வரை (அமெரிக்க நேரம்) ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 48 மணி நேரத்தில் போர் நிற்குமா அல்லது பிராந்திய போராக மாறுமா என்பது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : attack ,Iran ,Tehran ,US ,Middle East ,Sharif… ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான...