×

கரூர், திருச்சியில் சூறாவளிகாற்றுக்கு 10,000 வாழை மரங்கள் சேதம்

*மழையில் நனைந்த 1,000 டன் நெல்மணிகள்

குளித்தலை : கரூர், திருச்சியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் 10,000 வாழைகள் சேதமடைந்தது. மழையில் 1,000 டன் நெல்மணிகள் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் எதிர்வரும் 6 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டை, தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம், மருதூர், மேட்டு மருதூர், பணிக்கம்பட்டி, கணக்கப்பிள்ளையூர், வளையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 10,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியுடன் முறிந்து சாய்ந்தது. தார் ஈன்றாத வாழை மரங்களும் பாதியளவு முறிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகினர்.

திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் தண்ணீர் பள்ளி அருகே சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது.

மரம் சாலையின் நடுவே விழுந்ததால் திருச்சியில் இருந்து கரூருக்கு செல்லும் வாகனங்கள், குமாரமங்கலம் சோதனை சாவடி பெரிய பாலம் வழியாக குளித்தலை நகருக்கு சென்றது. அதேபோல் குளித்தலை நகரில் இருந்து பெரிய பாலம் வழியாக புறவழிச் சாலை சென்று மீண்டும் குமாரமங்கலம் சோதனை சாவடி வழியாக திருச்சி சென்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபட்டி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைச்சலை அறுவடை செய்து இங்கு கொண்டு வந்து சேர்த்தனர்.இந்நிலையில், நேற்று பெய்த திடீர் கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்தது. 1,000 டன் நெல்மணிகள் வீணாகியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Karur, Trichy ,Tamil Nadu ,
× RELATED பெரம்பலூரில் 57 பள்ளிவாசல்களில்...