- உயர் நீதிமன்றம்
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை
- கரூர் மாவட்டம்
- எல் ஏ. கீதா
- மணிமாறன்
- பத்திரப் பதிவு
- மனமங்கலம் வட்டம்
சென்னை: முத்திரைத் தீர்வை மற்றும் பத்திரப்பதிவு கட்டணமாக சுமார் ரூ.97 லட்சம் செலுத்தும்படி கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கீதா மற்றும் அவரது கணவர் மணிவண்ணனுக்கு பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் மணமங்கலம் வட்டத்தை சேர்ந்த சேனப்பாடியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை தலைவர், கரூர் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்டோரிடம் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த புகார் மனுவில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கீதாவும், அவரது கணவர் மணிவண்ணனும் கடந்த 2024ம் ஆண்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் இரண்டு பத்திரப்பதிவுகளை மேற்கொண்டனர்.
இதனால் அரசுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த தொகையினை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும், மணிவண்ணன் மற்றும் சிலரும் சேர்ந்து 2014ம் ஆண்டு ஸ்ரீ அக்னிஷ் அறக்கட்டளையை தொடங்கினோம். அதற்காக வாங்கப்பட்ட நிலத்தை என்னை மிரட்டி தன் பெயருக்கு மணிவண்ணன் மாற்றினார். அந்த நிலத்தில் இருந்த பள்ளியின் கட்டிடத்தை மறைத்து, இரண்டு பத்திரப்பதிவுகளை மேற்கொண்டுள்ளார். இந்த பத்திரப்பதிவில் முன்னாள் எம்.எல்.ஏ. கீதாவும், அவரது கணவர் மணிவண்ணனும் பத்திரப்பதிவுத் துறைக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த புகாரை விசாரித்த கரூர் இணை சார் பதிவாளர் பிறப்பித்த உத்தரவில், 2 கோடியே 68 லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டிடத்தை இருவரும் மறைத்ததன் மூலம், முத்திரை தீர்வையில் ரூ. 76,01,412 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 21,71,835 என்று மொத்தமாக ரூ. 97,73,247 இழப்பு ஏற்படுத்தி உள்ளதால் அந்த தொகையை இருவரும் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். செலுத்த தவறும்பட்சத்தில், சொத்து ஆவணத்தின் வில்லங்க சான்றிதழில் இந்த விபரம் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் உத்தரவில் கூறியுள்ளார்.
