×

பெரம்பலூரில் 57 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை சகோதரத்துவத்துடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

*ஈத் முபாரக் கூறி மகிழ்ச்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 57 பள்ளிவாசல்கள், 1000 பேர் ஒன்றாக கூடி தொழுவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளதோடு, மின் வளக்குகள் அலங்காரத்தில் பள்ளி வாசல்கள் ஜொலிக்கின்றன.உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களின் சிறப்பு பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று சகோதரத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.

ரமலான் என்பது முஸ்லிம்களுக்கு வருடத்தில் ஒரு சிறப்புமிக்க காலமாகும். இது பிரார்த்தனை செய்வதற்கும் மன்னிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ள காலம். நோன்பு மூலம் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தும், நற்செயல்கள் செய்வதன் மூலம் இஸ்லாமியர்கள் தங்களைத் தூய்மைப்படுத்தி கொள்கின்றனர். மேலும் கடந்த கால பாவங்கள் அனைத்திற்கும் மன்னிப்பு வேண்டி இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இதில்தான் ரமலானின் உண்மையான சாராம்சம் அடங்கியுள்ளது.

ரமலான் மாதம் தொடங்கும் போது, ​​மக்கள் ஒருவருக்கொருவர் ‘ரமலான் முபாரக்’ அல்லது ‘ரமலான் கரீம்’ என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். ரமலானின் கடைசி சில நாட்கள் சிறப்பு வாய்ந்தவை.

அந்த இரவில் அல்லாஹ் தனது அருளைப் பொழிகிறான் என்று நம்புவதால், அந்நாட்களை வல்லமையின் இரவு அல்லது அளவுகளின் இரவு என்று அழைக்கப்படுகிறது. ரமலான் மாதத்தின் முடிவில், பிறை தெரிந்தவுடன் உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை சகோதரத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் கடந்த பிப்ரவரி 19ம்தேதி நோன்பு காலம் தொடங்கியது. அன்று முதல் இஸ்லாமியர்கள் விடியற்காலை முதற்கொண்டு மாலை ெதாழுகை நேரம் வரை எச்சில் கூட விழுங்காமல் நோன்பு நோற்றனர்.

நோன்பு நாட்களில் இஸ்லாமியர்கள் 5 வேளை தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு நற்காரியங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர். நேற்று(20ந்தேதி) இரவு தமிழகமெங்கும் பிறை தெரிந்தது.

இதனை தொடர்ந்து புனித ரம்ஜான் பண்டிகை இன்று சகோதரத்துவத்துடன் பெரம்பலூரில் கொண்டாடப்படுகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகரிலுள்ள மவுலானா பள்ளி வாசல், மதரஸா பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல், மக்கா, மதீனா, நூர் பள்ளிவாசல், ஆலம்பாடி சாலை பள்ளி வாசல், துறைமங்கலம் பள்ளி வாசல்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய வி.களத்தூர் ஜாமிஆ பள்ளி வாசல், தமிழக அளவில் புகழ்பெற்ற லெப்பைக் குடிகாடு மேற்கு மஹல்லம், கிழக்கு மஹல்லம், அரும்பாவூர், விசுவக்குடி, பூலாம்பாடி, சத்திரமனை, முகமது பட்டினம், பெரிய வடகரை, அம்மாப் பாளையம், குரும்பலூர், பாடாலூர், பெரியம்மா பாளையம் பகுதிகளில் உள்ள 56 பள்ளி வாசல்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிறப்புத் தொழுகை நடத்தப்படும், இந்திய தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள, சமஸ்கான் எனும் ஜாகீர்தாரால் 1723ம் ஆண்டு கட்டப்பட்டு 303 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வாலிகண்டபுரம் சமஸ்கான் பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு பெரம்பலூரில் உள்ள 57 பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகைகள் இன்று காலை நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட அளவில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட அரசு காஜி அப்துல் சலாம் தலைமையில், அனைத்து பள்ளிவாசல் ஹஜ்ரத்துகள், முத்தவல்லிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர். பெரம்பலூரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் பள்ளிவாசல்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.

1000பேர் தொழுகை…

பெரம்பலூர் நகரில் மதரஸா சாலையிலுள்ள மவுலானா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று காலை நடைபெறும் சிறப்புத் தொழுகையில் மதரஸா பள்ளிவாசல், மக்கா, மதீனா பள்ளிவாசல்கள், நூர் பள்ளி வாசல், ஆலம்பாடி சாலை பள்ளிவாசல் உள்ளிட்ட ஐந்தாறு பள்ளி வாசல்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றாகக் கூடித் தொழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் வடக்கு மாதவி சாலையில் ஒன்றாகத் தொழுகை நடத்தவுள்ளனர்.

Tags : Ramadan ,Perambalur ,EID MUBARAK ,PERAMBALUR DISTRICT ,RAMJAN FESTIVAL ,Muslims ,
× RELATED Stalin Statement என்ற இலக்குகளை அடையவும்,...