×

சர்ச்சையில் சிக்கிய தேர்தல் ஆணையம்: தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கரில் ‘நான் பாரதம்’ வாசகம் எதற்காக?

தமிழ்நாட்டில் ஏப். 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். நூறு சதவீத வாக்களிப்பை உறுதிசெய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு ஸ்டிக்கர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘எனது வாக்கு எனது இந்தியா’, ‘நான் பாரதம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதில் ‘நான் பாரதம்’ என்ற வாசகம் இடம் பெற்றதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருதுநகர் மாவட்டக் குழு உறுப்பினர் நேரு கூறுகையில், ‘‘நான் இதுவரை எத்தனையோ தேர்தல்களில் வாக்களித்துள்ளேன். வழக்கமாக தேர்தல் ஆணைய விழிப்புணர்வு ஸ்டிக்கரில் ‘என் வாக்கு என் உரிமை’ என்றும், ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல, கட்டாயம் வாக்களிப்போம். 100 சதவிகிதம் வாக்களிப்போம்’ போன்ற வாசகங்களே இடம்பெறும். ஆனால் தற்போது ‘எனது வாக்கு, எனது இந்தியா, நான் பாரதம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நான் பாரதம் என்ற வாசகத்திற்கு கீழே இந்திய தேசியக் கொடியில் உள்ள காவி, வெள்ளை, பச்சை மூன்று நிறங்களும் இடம் பெற்றுள்ளது.

பாரதம் என்ற வார்த்தையை உறுதிப்படுத்தவே இந்த வண்ணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனது நாட்டின் பெயர் இந்தியா. பாரதம் அல்ல. இந்தியாவை பாரதம் என மாற்ற ஆர்எஸ்எஸ், பாஜவினர் நெடுங்காலமாக முயற்சித்து வருகின்றனர். அதில் தோல்வியும் அடைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ், பாஜவின் கைப்பாவையாக செயல்படுகிறது என எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மைதான் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த மோசமான தேர்தல் ஆணையத்தை வைத்துக்கொண்டு தேர்தல் எனும் ஜனநாயக திருவிழாவை நாம் எப்படி கொண்டாடுவது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நான் பாரதம் என்ற இந்த வாசகத்தை நீக்க வேண்டும். ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை உடனே அகற்ற வேண்டும்’’ என்றார்.

Tags : Election Commission ,Tamil Nadu ,
× RELATED பெண்கள் குறித்து இழிவான பேச்சு; அதிமுக...