×

என்.ஆர்.காங். கூட்டணியில் தவெகவுக்கு 10 தொகுதி..? பொதுச்செயலாளர் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்.9ம் தேதி நடக்கவுள்ளது. இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ இடையே 16-14 என தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டதாக பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார். ஆனால், கடந்த 16ம் தேதி இரவு நடந்த தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான பாஜ குழு பேச்சுவார்த்தையை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும், லாட்டரி அதிபர் மகன் சார்லஸ் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க கூடாது என 2 நிபந்தணைகளை ஏற்றல்தான் கூட்டணி. இல்லையென்றால் என்.ஆர்.காங்கிரஸ் தனித்துப்போட்டியிடும் என்று கடைசி நேர டிவிஸ்ட் வைத்தார் ரங்கசாமி. இதனால் ஒன்றிய அமைச்சர் மற்றும் பாஜ குழுவினர் திரும்பி சென்றனர். இந்த சூழலில், பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட்டு, தவெகவுடன் கூட்டணி அமைக்க என்.ஆர்.காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெயபால் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘‘எங்களுக்கு 16 தொகுதிகள் தருகிறோம் என்று சொன்னார்கள். அதில் மாகேவை பாஜ எடுத்துக்கிறோம் என்று கூறியுள்ளனர். நாங்கள் அதற்கு பதிலாக லாஸ்பேட்டையை கேட்டுள்ளோம். தற்போது 16 வேட்பாளர்களும் அப்ளிகேஷன் வாங்கி தயாராக வைத்துள்ளோம். ஒருவேளை லஜகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பாஜ நிற்பதாக பாஜ நிர்வாகிகள் சொன்னால், என்.ஆர்.காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்து கொண்டு சென்றுவிடும். அதில் 10 தொகுதிகள் தவெகவுக்கு கொடுத்து விடுவோம். இது என்.ஆர் முடிவு இல்லை, என்னுடைய தனிப்பட்ட கருத்து’’ என்றார்.

இதற்கிடையில் புஸ்ஸி ஆனந்த் விரைவில் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளாராம். கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள பாஜ தலைவர் மற்றும் நிர்வாகிகள், அமித்ஷா மூலம் நேரிடையாக பேசி முதல்வர் ரங்கசாமியை சம்மதிக்க வைத்து விடுவார்கள். எதுவாக இருந்தாலும் இன்றுக்குள் தெரிந்துவிடும் இரண்டு தரப்பினரும் கூறுகின்றனர்.

Tags : NR Congress ,Thaveka ,General Secretary ,Puducherry Assembly elections ,BJP ,Nirmal Kumar Surana ,National Democratic Alliance ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...