×

சொன்னாரு..! செஞ்சாரு..!! அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்

சொன்னாரு: 2021-22ம் நிதியாண்டில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

செஞ்சாரு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் இதுவாகும். இத்திட்டத்தில் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்பை தொடர ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2021-22ம் கல்வியாண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்கமே ரூ.5.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், மாணவர்களுக்கு இதுகுறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு இல்லாமல் போனது. அதன்படி, வெறும் 9 மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து, இத்திட்டம் குறித்து கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறிது சிறிதாக மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க ஆர்வம் காட்ட, 2025-26ம் கல்வியாண்டில் 231 பேர் உதவித்தொகையை பெற்றனர். இதற்கு ரூ.84,87 கோடி நிதி உயர்த்தப்பட்டு ஒதுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 385 மாணவர்கள் பயன்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பல்துறைகளில் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கை பெற்றவர்கள் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் இளங்கலை அல்லது முதுகலை முடித்து, முதுகலை படிப்பில் சேர்க்கை பெற வேண்டும் அல்லது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பில் சேர்க்கை பெற வேண்டும். சேர்க்கை பெறும் பல்கலைக்கழகங்கள் உலகத் தரவரிசையில் முதல் 1000 இடங்களுக்குள் இருத்தல் அவசியமாகும். இத்திட்டத்தின் கீழ் முதலில் குடும்ப ஆண்டு வருமான ரூ.8 லட்சத்திற்குள் இருப்பவர்களுக்கு ரூ.36 லட்சம் வரையும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்குள் இருப்பவர்களுக்கு ரூ.24 லட்சம் வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இத்திட்டத்தில் தகுதிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம், குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறையின் மூலம் ஜனவரி மற்றும் ஜூலையில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை துறை வெளியிடும். இருப்பினும், மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாயிலாக விவரங்களை அறிந்துகொண்டும் விண்ணப்பிக்கலாம். மேலும், வெளிநாடுகளில் சேர்க்கை பெற நடத்தப்படும் ஆங்கில மொழித்திறனுக்கான தேர்விற்கு நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Tags : Government of Tamil Nadu ,Aditravidar ,Christian ,Department of Adhiravidar and ,Welfare ,Tamil Nadu Legislature ,Chief Minister ,MLA ,K. Stalin ,
× RELATED பெண்கள் குறித்து இழிவான பேச்சு; அதிமுக...