×

டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு; அதிமுக கூட்டணியில் சசிகலாவிற்கு இடமில்லை: தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச உள்ளதாக பேட்டி

புதுடெல்லி: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் மற்றொரு கூட்டணியும் களம் காண்கின்றன. இதனிடையே, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்தே களம் காண உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1ம் தேதி மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், தொகுதிப் பங்கீடு தொடர்பாக தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனக் கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பு அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தொகுதிப் பங்கீடு குறித்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், மேலிடப் பொறுப்பாளரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியது. இந்தச் சூழலில் தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டார்.

அவர் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். நேற்றிரவு 9 மணி முதல் 11 மணி வரை சுமார் 2 மணி நேரம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பு சுமுகமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

கூட்டணியில் சசிகலாவைச் சேர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை. அதேபோன்று எங்களது கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகளைச் சேர்க்கவும் எந்தவித யோசனையும் கிடையாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கூட்டணி நிலையாக இருக்கிறது. சட்டப் பேரவை தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் எந்த அவசரமும் தற்போது இல்லை. தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.

Tags : Edappadi Palaniswami ,Amit Shah ,Delhi ,Sasikala ,AIADMK ,New Delhi ,General Secretary ,Tamil ,Nadu assembly elections ,Tamil Nadu ,DMK ,
× RELATED விளையாட்டு உலகின் மிக உயரிய கௌரவமாகக்...